Wednesday, June 13, 2007

ஓடாதே... ஒரு பக்கக் கதை...

ஓடாதே

10 வயது துருதுருப்புடன் எப்பொழுதும் நான் ஓடி விளையாடுவதைப் பார்த்து எங்கள் வீட்டில் அனைவருமே “ஓடாதே” என எச்சரிப்பர்.இதிலென்ன அதிசயம்...? இது எல்லார் வீட்டிலும் சகஜம்தானே...?

அடடா... நான் என்னைப் பற்றி உங்களுக்குச் சொல்லவேயில்லையே..! நான்...?

என் பெயர் சீனிவாசன். என்னை சீனு என்றே செல்லமாக அழைப்பர். நான் என் அண்ணனின் தம்பியா அல்லது மகனா என்று தெரியவில்லை. என்ன தலை சுற்றுகின்றதா...?

வெங்கடேஷ் அண்ணாவின் உடலிலிருந்து செல்லினை எடுத்து க்ளோனிங்க் முறையில் உருவாக்கப்பட்ட இந்த உலகின் முதல் க்ளோனிங் குழந்தை.

உலகமே என்னை உருவாக்கத் தடைசெய்தது... கடவுளுக்கும் இயற்கைக்கும் செய்யும் கொடுமை என எச்சரித்தனர்.

யார் சொன்னது க்ளோனிங் குழந்தை என்றால் அலட்சியம் செய்து வளர்ப்பார்கள் என்று...? எங்கள் வீட்டிற்கு வந்து பாருங்கள்... என் மீது பொழியும் அன்பு மழைக்கு நான் என்ன தவம் செய்தேனோ...? குறிப்பாக வெங்கடேஷ் அண்ணா என் மீது காட்டும் பரிவும் அன்பும் அபரிமிதமானது. ஒருவேளை அவரது உடலிலிருந்து செல்லெடுத்து நகலெடுக்கப்பட்டதால் என் மீது அபரிமிதமான பாசமோ...? அனைவரும் என்னை ஓடாதே என்று அன்பால் எப்பொழுதும் எச்சரித்துக்கொண்டிருப்பர்.

ஒரு நாள் ஓடி விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்தேன். அப்பொழுது நான் ஜன்னலில் ஏறி ஹேய் என்று கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி பயப்படவைக்கவேண்டும் என எண்ணி ஜன்னலருகே சென்றேன். அம்மாவும் வெங்கடேஷ் அண்ணாவும் பேசிக்கொண்டிருந்தனர். பேச்சில் என் பெயர் அடிபடவே நான் உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்தேன்.

“டேய் வெங்கடேஷ்.... கொஞ்சம் பொறுடா... அவனுக்கு இப்பத்தான் 10 வயசு ஆகுது....அவனோட உடம்பு நல்லா வளரட்டும்...அப்பொழுதுதான் அவனோட உடல்உறுப்புக்கள் நல்ல ஆரோக்யமாக இருக்கும்....இன்னும் ஒரு வருஷத்துக்குள்ள அவனோட இதயத்தை எடுத்து உனக்கு ட்ரான்ஸ்பிளாண்ட் பண்ணிடலாம்...மீதி உறுப்புக்களை நல்ல விலைக்கு வித்துடலாம்...”